ஆள் கடத்தல் வழக்கில் விசாரணைக்கு வந்த பூவையார் எனப்படும் பூவை ஜெகன்மூர்த்தியை நீதிமன்றம் பலவாறாக கண்டித்துள்ளது.
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும், கேவி குப்பம் எம்.எல்.ஏவுகாக இருப்பவர் பூவை ஜெகன்மூர்த்தி. இவர் காதல் பிரச்சினை ஒன்றில் சிறுவனை கடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.
இந்நிலையில் முன் ஜாமீன் கோரி தொடர்ந்து வழக்கின் விசாரணைக்காக இன்று பூவை ஜெகன்மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவரது ஆதரவாளர்கள் 300க்கும் பேருக்கும் மேல் சூழ்ந்த நிலையில் அவர் வந்தார்.
இந்த வழக்கின் விசாரணையில் பூவை ஜெகன்மூர்த்தியை கண்டித்து பேசிய நீதிபதிகள் “200-300 பேரை கூட்டி வந்தால் நீதிபதிகள் பயந்து விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம். நீதிமன்றம் நினைத்திருந்தால் இன்று காலையில் 10 நிமிடத்தில் உங்களை கைது செய்து உள்ளே வைத்திருக்கும். விசாரணைக்கு தனியாகதான் வர வேண்டும்.
கட்டப்பஞ்சாயத்து செய்யவா மக்கள் உங்களை ஓட்டு போட்டு சட்டமன்றம் அனுப்பினார்கள்? நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி. உங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு மரியாதை தாருங்கள். விசாரணைக்கு சரியாக ஒத்துழையுங்கள்” என கண்டித்து பேசியுள்ளனர். இது நீதிமன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K