தமிழகத்தில் 5 நாள்களுக்கு கனமழை!.. மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

Mahendran

செவ்வாய், 1 அக்டோபர் 2024 (15:40 IST)
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
 
மேற்கு திசை காற்றின் வேக மாற்றம் மற்றும் பருவமழை தொடங்க இருப்பதன் காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்வதை நாம் காண முடிகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஐந்து நாட்களுக்கு வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழையும், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மஞ்சள் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.
 
இன்று தமிழகம், கேரளா, கர்நாடகா, லட்சத்தீவுகள், திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா, அசாம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகமும் புதுச்சேரியும் அக்டோபர் 1 முதல் 5ஆம் தேதி வரை கனமழை எதிர்பார்க்கப்படும் பகுதிகளாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், அக்டோபர் 1 முதல் 3ஆம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள், குமரி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் வாய்ப்பு உள்ளதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்