செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு நிறுத்தம்: பொதுமக்கள் நிம்மதி!

ஞாயிறு, 29 நவம்பர் 2020 (15:21 IST)
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீர் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக சற்று முன் வெளியான தகவலில் இருந்து தெரியவந்துள்ளது 
 
சமீபத்தில் நிவர் புயல் தமிழகத்தை நோக்கி வந்த நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் தொடர்ச்சியாக சில நாட்கள் கனமழை பெய்தது. இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்த நீரின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி மொத்த கொள்ளளவான 24 அடிகளில் 22 அடி தண்ணீர் நிரம்பியது 
 
இதனை அடுத்து முதலில் ஆயிரம் கன அடி முதல் 9 ஆயிரம் கனஅடி வரை செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டது என்பதும் இதனால் அடையாறு உள்பட பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மழை இல்லாத காரணத்தினால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனை அடுத்து செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து ஐந்து நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் தற்போது நிம்மதியாக உள்ளனர் 
 
இருப்பினும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் மீண்டும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து நீர்வரத்து அதிகமானால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் நீர் வெளியேற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்