குமாரபாளையத்தில் அதிமுக கூட்டத்தில் தவெகவினர் கட்சி கொடிகளுடன் கலந்துக் கொண்டதாக வெளியான செய்தி குறித்து சமூக வலைதளங்களில் தவெகவினரே சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி கரூரில் நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்த விவகாரத்திற்கு விஜய்யும், கட்சியினரும்தான் பொறுப்பு என ஆளும் திமுக அரசின் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் விஜய்க்கு ஆதரவாக பேசி வந்தன.
தற்போது விஜய் இந்த சம்பவம் குறித்த எந்த பதிலும் முறையாக அளிக்காமல் இருப்பதால், விஜய்க்கு ஆதரவாக பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விஜய் ரசிகர்களுக்கு நல்ல அணுகுமுறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
முன்னதாக ஒரு கூட்டத்தில் பேச எடப்பாடி பழனிசாமி சென்றபோது தவெக சார்பில் பேனர் அடிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று குமாரப்பாளையம் கூட்டத்தில் பெரிய தவெக கொடிகளோடு சிலர் கலந்துக் கொண்டனர். அதை சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிசாமி “கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என பேசியிருந்தார்.
இந்நிலையில் அந்த கொடியை ஆட்டிக் கொண்டிருந்தவர் அதிமுக கொடி கலர் அமைந்த டீ சர்ட் அணிந்தபடி நின்ற புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. தவெகவை அதிமுக தனது கூட்டணிக்குள் ஈர்ப்பதற்காக தங்கள் கட்சியினரை வைத்தே இந்த வேலையை செய்ததா என சமூக வலைதளங்களில் பேச்சு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K