கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏற்பட்ட புகாரின் அடிப்படையில் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். அவர் திமுகவை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "அவர் திமுக அனுதாபி தான், கட்சியை சேர்ந்தவர் இல்லை" என்று விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், ஞானசேகரன் மீது தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்றும் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு இன்று குரல் பரிசோதனை செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குரல் பரிசோதனை முடிந்த பிறகு, காவல்துறையினர் அவரை மீண்டும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாகவும், அதன் பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று நாளை அல்லது நாளை மறுநாள் இரத்த பரிசோதனை செய்யப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.