குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார்.. இன்னொரு வேங்கைவயல் சம்பவமா?

Mahendran

புதன், 15 மே 2024 (11:31 IST)
விழுப்புரம் மாவட்டம் கே.ஆர்.பாளையம்  கிராமத்தில் குடிநீர் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
விழுப்புரம் மாவட்டம் கே.ஆர்.பாளையம்  கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் கிணற்றில் மலம் கலக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
கஞ்சனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கே.ஆர்.பாளையம் கிராமத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து அந்த கிராமத்து மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். கிணற்று தண்ணீரை மோட்டார் மூலம் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு ஏற்றி, குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில் மலம் கலந்ததாகவும், இந்த சம்பவம் தொடர்பாக கஞ்சனூர் காவல்துறையினர் விசாரணை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே வேங்கை வயலில் இது போல் ஒரு சம்பவம் நடந்து ஒரு வருடம் ஆகியும் குற்றவாளிகள் இன்னும் பிடிபடவில்லை என்ற நிலையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்திலும் அதே போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் ஆவது குற்றவாளிகள் யார் என்பதை உடனடியாக கண்டுபிடித்து அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்