பெரியார் நினைவிடத்திற்கு நேரில் சென்ற விஜய்.. மாலை தூவி மரியாதை..!

Mahendran

செவ்வாய், 17 செப்டம்பர் 2024 (15:11 IST)
சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய் இன்று நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.
 
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி, இன்று காலை விஜய்  வெளியிட்ட அறிக்கைக்கு பின்னர், விஜய் நேரில் பெரியார் திடலுக்கு சென்று, அவரின் நினைவிடத்தில் உள்ள படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தியது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியதற்கு பிறகு, இது விஜய்யின் முதலாவது அரசியல் நிகழ்வாகும். அவருடன் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னதாக இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், விஜய் கூறியதாவது:, "சாதி, மத ஆதிக்கம் மற்றும் மூடநம்பிக்கைகளை எதிர்த்து தமிழர்களை விழிப்புணர்வுக்குத் தூண்டியவர் தந்தை பெரியார். அவர் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தின் மூலம் சமூகத்தில் ஏற்பட்டுள்ள அடிமைத்தனத்தை அழித்தவர். மக்களை பகுத்தறிவு மனப்பான்மையுடன் போராடச் செய்தவர். சமூக சீர்திருத்தவாதியும், தென்னகத்தின் சாக்ரட்டீசும் ஆன பெரியாரின் பிறந்த நாளில், அவர் வலியுறுத்திய பெண் உரிமை, சமத்துவம், சம உரிமை போன்றவற்றைப் பாதுகாக்க நாங்கள் உறுதியேற்போம்" எனத் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்