துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் - விஜயகாந்த் எச்சரிக்கை

செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (09:53 IST)
சூரப்பா நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் 18-ந் தேதி கவர்னர் மாளிகை நோக்கி  தே.மு.தி.க. சார்பில் கண்டன பேரணி நடத்தப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
அண்ணா பலகலைக்கழக துணைவேந்தராக கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்து உத்தரவிட்டார். சூரப்பா அடுத்த வாரம் பொறுப்பேற்க உள்ளார். 
 
காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் பல போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக நியமிக்கப்பட்டதற்கு  பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசுகையில் கூகுளின் (CEO) சுந்தர் பிச்சை,  இஸ்ரோவின் தலைவர் கே.சிவன் போன்ற தமிழர்களின் அறிவும், திறமையும் உலகளவில் உச்சத்தில் உள்ள வேளையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு தமிழர் அல்லாமல் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை நியமனம் செய்திருப்பது ஒட்டுமொத்த தமிழர்களின் உரிமைகளை பறிப்பதாகவே உள்ளது என்றார்.
துணைவேந்தர் பதிவிக்காக விண்ணப்பித்திருந்த 170 பெயர்களில், எம்.கே.சூரப்பா தான் தகுதியானவர் என்பதை தமிழக கவர்னர் எப்படி முடிவு செய்தார். கவர்னர், சூரப்பாவின் துணைவேந்தர் நியமனத்தை திரும்பப்பெறாவிட்டால் 18-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி கண்டன பேரணி நடத்தப்படும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்