வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது, இன்னொரு முறை பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; தமிழிசை சௌந்தர்ராஜன்

வெள்ளி, 19 ஜனவரி 2018 (08:29 IST)
ஆண்டாள் பற்றி தெரிவித்த கருத்துகளுக்கு கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்டது பத்தாது என்றும், அவர் மேலும் ஒரு முறை மக்களிடம் மனதார மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த ஒரு விழாவில் கவிஞர் வைரமுத்து வைணவ பெண் கடவுள் ஆண்டாள் பற்றி தவறான  வார்த்தையை குறிப்பிட்டு பேசியதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலரும் வைரமுத்துவிற்கு எதிராக கருத்து தெரிவித்தனர். மேலும் மணவாள மாமுனிகள் சன்னதியின் ஜயர் சடகோப ராமானுஜர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
 
இதுகுறித்து வைரமுத்து வருத்தம் தெரிவித்த பின்பும் ஏன் இப்படி செய்கிறீர்கள் என திரையுலகினர் பலர் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். படவிழாவில் கலந்து கொண்டு பேசிய பாரதிராஜா எங்களுக்கு மதம் என்பது ஒருபோதும் கிடையாது, எங்களை குற்றம்பரம்பரை ஆக்கி விடாதீர்கள் என  கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், ஆண்டாள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த வைரமுத்துவின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்றும் அதேபோல் அவர் கூறிய கருத்திற்கு வருந்தும் விதமாக வைரமுத்து மனதார மன்னிப்புக் கேட்கவில்லை என்றார். எனவே வைரமுத்து இன்னொரு முறை தமிழ் மக்களிடம் மனதார பகிரங்க மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும் என தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்