சீனாவின் உளவு கப்பல் இந்தியாவின் பாதுகாப்புக்கு அறைகூவல் – வைகோ!

திங்கள், 15 ஆகஸ்ட் 2022 (10:01 IST)
சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல் என வைகோ அறிக்கை.


சீன அரசு இலங்கைக்கு கடன் கொடுத்தற்காக அம்பந்தோட்டா துறைமுகத்தை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி சீனா, தனது 'யுவான் வாங் 5' என்ற ஆராய்சி கப்பலை அம்பந்தோட்டா துறைமுகத்தில், 6 நாட்கள் நிறுத்தி செயற்கைக்கோள் தொடர்பான ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக அறிவித்தது.

சீனாவின் உளவு கப்பலான யுவான் வாங்க் 5 என்ற கப்பல் கடந்த 11 ஆம் தேதியன்று இலங்கை அம்பந்தொட்டை துறைமுகத்திற்கு வர உள்ளதாகவும், எரிபொருள் நிரப்புவதற்காக 17 ஆம் தேதி வரை அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் சீன உளவு கப்பலின் இந்த வருகை இந்தியாவை உளவு பார்க்கும் நோக்கில் இருக்கலாம் என இந்திய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து சீன உளவுக் கப்பலை இலங்கை எல்லைக்குள் அனுமதிக்கவில்லை என்றும் அந்த கப்பல் சர்வதேச கடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்தது.

நேற்று வரை இலங்கை அரசு அனுமதி தராததால், சீன உளவு கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்தில் இருந்து 600 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி சீன உளவுக் கப்பல் அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வர இலங்கை அனுமதி தந்தது. எனவே சீன உளவு கப்பல் வரும் 16 ஆம் தேதி அம்பந்தொட்ட துறைமுகத்திற்கு வந்தடையும். பின்னர் எதிர் வரும் 22 ஆம் தேதி வரை கப்பல் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் சீனாவின் உளவு கப்பல் நிறுத்தப்படுவது இந்தியாவின் பாதுகாப்புக்கு விடப்பட்டிருக்கிற அறைகூவல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது,

சீனா உளவு பார்க்காமல் இருக்கவும், நாட்டின் பாதுகாப்பில் அச்சுறுத்தல் இல்லாத வகையில் ராஜதந்திர நடவடிக்கையில் ஈடுபட்டு, இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும். இலங்கை வெளியுறவு அமைச்சகம், சீனாவின் யுவான் வாங்க்-5 உளவுக் கப்பல் ஹம்பந்தோட்டா துறைமுகத்தில் ஆகஸ்ட் 16 முதல் 22ம் தேதி வரை நங்கூரமிட்டு நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறது. இது கடும் கண்டனத்திற்கு உரியது.

இந்திய அரசு, இலங்கை அரசின் இத்தகைய செயல்களை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. உடனடியாக இந்தியா தீவிரம் கவனம் செலுத்தி சீனக் கப்பல் வருகையை தடுத்து நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்