மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலின் துணை பொதுச்செயலாளர் பதவியை எதிர்பார்த்ததாகவும், ஆனால் அந்த பதவி அவருக்கு கிடைக்காததால் அதிருப்தியில் இருப்பதாகவும், முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக துணை நிற்கும் என்று மட்டுமே தீர்மானம் போட்டார்கள் என்றும், ஆனால் தனக்கு துணைப் பொதுச் செயலாளர்கள் பதவி வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் கேட்டதாகவும், அதற்கு கட்சியில் எதிர்ப்பு இருந்ததால் அந்த பதவி அவருக்கு கிடைக்கவில்லை என்றும், அதனால் அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் ஆர்வி உதயகுமார் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் மன்னர் ஆட்சிக்கு மகுடம் சூட்டும் நிலைதான் தற்போது உள்ளது என்றும், ஜனநாயகத்திற்கு பேராபத்து ஏற்பட்டுள்ளது என்றும், இதை தமிழ்நாட்டு மக்களுக்கு உரக்கச் சொல்லுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதனை மடை மாற்றவே தொகுதி மறு வரையறை என்ற பிரச்சனையை முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்துள்ளதாகவும், ஈரை பேனாக்கி பேனை பெருமாள் ஆக்கி, பெருமாளை பெத்த பெருமாள் ஆக்குவதில் திமுகவினர் வல்லவர்கள் என்றும், இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்சிப்படுத்த நினைக்கிறார்கள் என்றும் ஆர்.வி உதயகுமார் கூறினார்.