உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்த தந்தை-மகன் பரிதாப பலி!

வெள்ளி, 27 டிசம்பர் 2019 (13:49 IST)
முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் இன்று தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் திண்டுக்கல்லில் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பியபோது தந்தை மகன் பரிதாபமாக பலியாகிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 
 
இன்று உள்ளாட்சி நடைபெறும் மாவட்டங்களில் ஒன்று திண்டுக்கல் மாவட்டம். இம்மாவட்டத்தில் வத்தலக்குண்டு கன்னிமார் கோவில் என்ற பகுதியைச் சேர்ந்த 50 வயது தங்கப்பாண்டி என்பவரும் 25 வயது இவரது மகன் மோகன் என்பவரும் இன்று காலை தங்கள் சொந்த ஊரான ராமநாயக்கன்பட்டிக்கு உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்தனர். இருவரும் வாக்களித்துவிட்டு தங்களது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வத்தலக்குண்டு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கினர்.
 
பழைய வத்தலக்குண்டு பிரிவில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தின் மீது வத்தலக்குண்டில் இருந்து தேனி சென்ற தனியார் பேருந்து ஒன்று பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தந்தை, மகன் இருவரும் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகினர். உள்ளாட்சி தேர்தலில் வாக்களிக்க சென்றவர்கள் விபத்தில் இறந்த செய்தி கேட்டு அவர்களுடைய உறவினர்கள் கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் கரைய வைக்கும் அளவில் இருந்தது. இந்த விபத்து தொடர்பாக வத்தலகுண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்