தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவில் பேசிய தவெக தலைவர் விஜய், பாஜக, திமுகவை விமர்சித்து பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு விழா சென்னையில் நடந்து வருகிறது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய் ”நாம் கட்சித் தொடங்கியது பொறுக்கமுடியாமல் பலர் நம்மை விமர்சித்து வருகின்றனர். சிலர் கேட்கிறார்கள் அந்த கட்சியில் எல்லா பதவிகளிலும் இளைஞர்களே இருக்கின்றார்கள். ஏன் இருக்கக் கூடாதா? அறிஞர் அண்ணா திமுகவை தொடங்கியபோதும், எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியபோதும் அவர்களோடு நின்றவர்கள் இளைஞர்கள்தான். அதனால்தான் அவர்கள் ஆட்சி அமைத்தார்கள். அப்படியாக இந்த இளைஞர்களும் ஆட்சியை அமைப்பார்கள்.
சிலர் கேட்கின்றனர் அந்த கட்சியில் உள்ளவர்கள் எல்லாரும் சாதாரண ஆட்கள் என்று.. இதற்கும் அதையேதான் கேட்கிறேன். ஏன் சாதாரண ஆட்கள் பதவிகளுக்கு வரக் கூடாதா?” என கேள்வி எழுப்பி பேசினார்.
மேலும் “சமீபமாக மத்திய அரசு நமது மாநிலத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை தர மறுத்து வருகின்றது. தரவேண்டியது அவர்கள் கடமை. கேட்டு பெற வேண்டியது மாநிலத்தை ஆளும் கட்சியின் உரிமை. ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு அந்த பாசிச கட்சியும், இந்த பாயாச கட்சியும் சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு நடுவேயும் நமது பசங்கள் சிலர் TVKForTN என ஹேஷ்டேக் போட்டு ஆட்டம் காட்டிவிட்டு வந்ததையும் நான் பார்த்துக் கொண்டிருந்தேன்” என பேசியுள்ளார்.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக பல வலுவான மாநில கட்சிகளை போலவே தவெகவும் தனது பூத் கமிட்டியை பலப்படுத்த வேண்டும் என்றும், இதற்காகவே விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K