டிடிவி தினகரன் அவசர ஆலோசனை: டெல்லியின் பிடியில் இருந்து தப்புவாரா?

செவ்வாய், 18 ஏப்ரல் 2017 (09:58 IST)
தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ள அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமான இரட்டை இலையை தங்கள் அணிக்கு பெற்றுத்தர தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு இடைத்தரகர் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக சசிகலா அணியை சேர்ந்த டிடிவி தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


 
 
டெல்லியில் சுகேஷ் சந்திர சேகர் என்பவரை டெல்லி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நேற்று ஆடம்பர விடுதி ஒன்றில் கைது செய்தனர். அவரிடம் இருந்து 50 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றினர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் இரட்டை இலை சின்னத்தை மீட்டுக்கொடுக்க 60 கோடி ரூபாய் லஞ்சம் பேரம் பேசியதாகவும் அதில் 1.30 கோடி ரூபாய் முன் பணமாக பெற்றதாக கூறினார்.
 
இதனையடுத்து டிடிவி தினகரன் மீது டெல்லி போலீசார் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் டிடிவி தினகரன் அடையாரில் உள்ள வீட்டில் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஜீனசேனனுடன் டிடிவி தினகரன் இந்த ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
 
டெல்லி போலீசார் இன்று சென்னை வருவதையொட்டி டிடிவி தினகரன் இந்த அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை வரும் டெல்லி போலீஸ் இன்றே டிடிவி தினகரனை கைது செய்யக்கூடும் என கூறப்படுகிறது. இதனாலே அவர் வழக்கறிஞர்களுடன் அவசர ஆலோசனையில் இறங்கியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்