நான் செய்த முதல் தவறு இதுதான். தினகரனின் முதல் மேடை பேச்சு

வியாழன், 9 மார்ச் 2017 (22:00 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட டிடிவி தினகரன், ஒரே நாளில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டு அதன் பின்னர் துணை பொதுச்செயலாளர் என்ற பதவியையும் பெற்றார். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் மற்றும் திமுகவை தாக்கி அவ்வப்போது பேட்டி கொடுத்து வரும் தினகரன் இன்று அதிமுகவின் அதிகாரபூர்வ பொதுக்கூட்டத்தில் முதன்முதலில் துணை பொதுச்செயலாளராக கலந்து கொண்டு பேசினார்


 


1999 ஆம் ஆண்டு நகர செயலாளராக இருந்த பன்னீர்செல்வத்தை தேனி மாவட்ட செயலாளராக்கினேன்: பன்னீர்செல்வம் பெயரை ஜெயலலிதாவிடம் நான் பரிந்துரைத்தது தான் முதல் தவறு என்று கூறிய தினகரன் அதிமுகவை எப்படியாவது அழித்துவிடலாம் என பன்னீர்செல்வம் நினைத்துக்கொண்டிருக்கிறார்: பன்னீர்செல்வம் உள்ளிட்ட சிலர் திமுகவுடன் சேர்ந்து அதிமுக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருகின்றனர். அது ஒருபோதும் நடக்காது' என்று ஆவேசமாக பேசினார்

சென்னை மைலாப்பூரில் உள்ள மாங்கொல்லை பகுதியில் அதிமுக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்திற்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடதக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்