அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுகவே விரும்புகிறது: அமைச்சர் ஜெயகுமார்

புதன், 16 ஜனவரி 2019 (11:26 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன் ஒருசில மாதங்களில் அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்றே அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டது. ஆனால் தினகரன், ஓபிஎஸ் ஆகியோர்களால் சில குழப்பங்கள் ஏற்பட்டாலும் அதிமுக ஆட்சி தொடர்ந்து நீடித்து வருகிறது. கருணாநிதி போல் ராஜதந்திரமாக மு.க.ஸ்டாலின் செயல்பட்டிருந்தால் அதிமுக ஆட்சி கவிழ்ந்திருக்கும் என்றும் ஆனால் அவர் துணிச்சலான முடிவை எடுக்காததால் ஆட்சி தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதிமுக ஆட்சியை கவிழ்ந்து சட்டமன்றத்தை கலைத்துவிட்டால் திமுக எம்.எல்.ஏக்களும் பதவி இழந்துவிடுவார்கள் என்பதால் அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்கள் விரும்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நோக்கில் திமுக தலைவர் ஸ்டாலின் செயல்படுகிறார் என்றும், அவரது எண்ணம் ஈடேறாது என்றும் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் கூறியுள்ளார்.

மேலும் கோடநாடு கொலை, கொள்ளையில் முதலமைச்சருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, 'மடியில் கனம் இல்லாததால், எங்களுக்கு பயம் இல்லை' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்