தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் திடீர் விலகல்..!

Mahendran

திங்கள், 26 பிப்ரவரி 2024 (18:59 IST)
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அசோகன் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
நான் பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தைச் சார்ந்தவன். என் தந்தை ஒரு சுத்ந்திர போராட்ட தியாகி, 1980யில் நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நின்று வெற்றி வாய்பை இழந்தவர். அவரைத் தொடர்ந்து நானும் என்னை காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைத்துக் கொண்டு செயலாற்றி வந்துள்ளேன்.
 
1996ல் மறைந்த மக்கள் தலைவர் ஐயா அவர்கள் எடுத்த அரசியல் ரீதியான முடிவை அன்று ஏற்றுக் கொண்டு அவருடன் தமிழ் மாநில காங்கிரஸில் பயணித்து அதில் மாநில பொதுக்குழு மற்றும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றி வந்துள்ளேன். 
 
அதே போல அவருடைய மறைவுக்கு பின் அவருடைய புதல்வராகிய தங்களின் தலைமையை ஏற்று தங்களின் மேலான தலைமையின் கீழ் தலைமை நிலை செயலாளராக இன்று வரை பணியாற்றி வந்துள்ளேன்.
 
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தாங்கள் எடுத்துள்ள பா.ஜ.க கூட்டணி என்பது எனக்கு உளவியல் ரீதியாக ஏற்புடையதாக இல்லை. எனவே கனத்த இதயத்துடன் தங்களின் மேலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலிருந்து இன்று (26.02.2024) முதல் முதல் விலகிக் கொள்ள முடிவு செய்துள்ளேன். என்னுடைய முடிவை ஏற்றுக் கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்