6 பெண்களை திருமணம் செய்து மோசடி - கைதான வின்செண்ட்! மாயமான இன்பராஜ்!

புதன், 1 டிசம்பர் 2021 (08:49 IST)
திருநெல்வேலியில் வரதட்சணை பெறுவதற்காக பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றிய மோசடி கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி என்.ஜீ.ஓ.பி காலணி உதயாநகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் இவரது மகள் விஜிலாராணியை சமீபத்தில் வின்செண்ட் பாஸ்கர் என்ற நபருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். கல்யாண தரகர் இன்பராஜ் என்பவர் மூலமாக இந்த வரன் கிடைத்துள்ளது.

திருமணத்தில் 40 பவுன் தங்க நகையும், 3 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டுள்ளது. சில நாட்களிலேயே நகைகளை வின்செண்ட் விற்றுவிட்டதால் கணவன் – மனைவி இடையே தகராறு எழுந்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கணேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டபோது வின்செண்ட் பாஸ்கர் ஏற்கனவே 5 பெண்களை திருமணம் செய்து வரதட்சணை பெற்று மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. மேலும் தரகர் இன்பராஜ் உதவியுடன் போலியாக அம்மா, சித்தி போன்றவர்களை நடிக்க வைத்து இந்த மோசடி நாடகம் அரங்கேற்றப்பட்டது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வின்செண்டை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவான இன்பராஜை தேடி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்