திருவண்ணாமலை சிறுமி உயிரிழப்பிற்கு காரணமான குளிர்பான நிறுவனத்தில் ஆய்வு!

J.Durai

புதன், 14 ஆகஸ்ட் 2024 (13:08 IST)
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த கனிக்கிலுப்பை கிராமத்தில் நேற்று முன் தினம் 10ரூபாய் குளிர்பானம் குடித்து 6வயது சிறுமி  காவ்யா ஸ்ரீ உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதனை அடுத்து குளிர்பானம் விற்பனை செய்த கடைக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், குளிர்பானம் உற்பத்தி ஆலையிலும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில் பொன்னேரி அருகே ஏலியம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள சிறுமி குடித்த டெய்லி குளிர்பானத்தின் கிளை குளிர்பான ஆலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். உணவு பாதுகாப்பு துறையின் திருவள்ளூர் மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குளிர்பானங்களை சேகரித்து ஆய்வு செய்தனர்.
 
தொழிற்சாலையில் உள்ள சுகாதாரம் குறித்தும் குளிர்பான உற்பத்தி தொடர்பாகவும் மூலப் பொருட்கள் குறித்தும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்தனர். 
 
மேலும் சிறுமி குடித்த குளிர்பானத்தின் தயாரிப்பு பேட்ச் எண் கொண்ட குளிர்பானங்கள் ஏதேனும் இந்த ஆலையின் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 
 
மேலும் மத்திய உணவு பாதுகாப்பு துறையால் உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில் மத்திய உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரி ரவீன் குளிர்பான ஆலையில் இருந்து மாதிரிகளை சேகரித்து பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். 
 
சிறுமி உயிரிழப்பிற்கு குளிர்பானம் குடித்ததே காரணம் என்று உறுதியாக வில்லை எனவும், இங்குள்ள தொழிற்சாலையில் குளிர்பான மாதிரிகள் ஆய்வு முடிவில் பாதிப்புகள் இருப்பது கண்டறியப்பட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் எனவும், குளிர்பான ஆலையில் தயாரிக்கப்பட்டுள்ள குளிர்பானங்கள் அனைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு உகந்ததா என்பது குறித்து ஆய்வு மேற் கொள்ளப்பட்டதாக மாவட்ட நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திர போஸ் தெரிவித்தார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்