அரசுப்பேருந்துகளில் திருக்குறள் அவமதிப்பு - வீடியோ

திங்கள், 17 ஜூலை 2017 (15:33 IST)
தமிழக அரசு பேருந்துகளில் இடம் பெற்றுள்ள திருக்குறள் மற்றும் திருவள்ளுவர் உருவம் ஆகியவை சிதைந்த நிலையில் காணப்படுகிறது. 


 

 
தமிழக அரசின் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவர் கரூரை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். தமிழக போக்குவரத்து துறையின் மானியக்கோரிக்கையின் போது அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அடிக்கடி குறள் கூறியபடி அதற்கான விளக்கத்தோடும், பதில் அளித்து மானியக்கோரிக்கையில் விவரம் அளித்தார். 
 
இந்நிலையில் அவரின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுப்போக்குவரத்துகழகத்தில் உள்ள பேருந்துகளில் காலம் காலமாக திருக்குறள் எழுதப்பட்டிருந்தது. தி.மு.க, அ.தி.மு.க மீண்டும் தி.மு.க என ஆட்சி மாறிய போதெல்லாம், கை வைக்காத ஒரே ஒரு இடம் அரசுப்பேருந்துகளில் உள்ள திருக்குறள்தான். அப்படி இருக்கும் திருக்குறள் தற்போது அரசுப்பேருந்துகளில் ஆங்காங்கே சிதைக்கப்பட்டுள்ளதாகவும், அந்த திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் உருவம் சிதைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு சில பேருந்துகளில் திருக்குறளையே காணவில்லை என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 
 
மேலும் பேருந்துகளில் பெண்கள், ஆண்கள் என்று இருக்கையை குறிப்பிடும் வாசகங்களும், பயணிகளிடம் டிக்கெட் இல்லை என்றால் அபராதம் என்பது குறித்தும் மட்டுமே ஸ்டிக்கர்களும் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஐயன் திருவள்ளுவரின் நிலை பரிதாபகரமாக உள்ளது. 
 
அதுவும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா தமிழ் வாழ்க என்று அனைத்து அரசு அலுவலகங்களிலும் எல்.இ.டி பல்பு மூலமாக தமிழை ஒளிரச்செய்துள்ளவர். அவருடைய ஆட்சியில் இப்படியா என்ற கேள்வி எழுந்ததோடு, சட்டசபையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போக்குவரத்து மானியக்கோரிக்கையில் மட்டுமே இதே துறையை சார்ந்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை வாசித்து பின்பு விளக்கமளித்ததும், அவருடைய துறையிலேயே திருக்குறள் அழிக்கப்பட்டும், சிதைக்கப்பட்டும் உள்ளதை பொதுநல ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களுடமிடையே பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

சி.ஆனந்தகுமார் - கரூர் செய்தியாளர்
 

வெப்துனியாவைப் படிக்கவும்