பணி நியமனங்களில் ரூ.30 கோடி லஞ்சம்? - துணை வேந்தருடன் சிக்கும் பலர்

திங்கள், 5 பிப்ரவரி 2018 (10:22 IST)
கோவை பாரதியார் பல்கழைக்கழக பணி நியமன விவகாரத்தில் பல கோடி ரூபாய் லஞ்சம் வசூலிக்கப்பட்டிருப்பதாக செய்திகள வெளிவந்துள்ளது.

 
கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பணிபுரிந்து வருபவர் கணபதி. இவர், உதவி பேராசிரியர் பணி நியமனத்திற்கு தன்னிடம் ரூ.30 லட்சம் லஞ்சம் கேட்டார் எனவும் அதில் ஒரு லட்சத்தை ரொக்கமாகவும், மீதி ரூ.29 லட்சத்தை காசோலையாகவும் கணபதியிடம் கொடுத்ததாக சுரேஷ் என்பவர் லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் புகார் அளித்தார். 
 
அதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த 3ம் தேதி பாரதியார் பல்கலைக்கழகத்தில் திடீர் சோதனை நடத்தினார். மேலும், கணபதியின் அலுவலகம் மற்றும் பல்கலைக்கழகம் அருகே மருதமலை அடிவாரத்தில் உள்ள அவரின் வீடு ஆகிய இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப் பட்டன.  அதேபோல், அவருக்கு உடைந்தையாக இருந்த வேதியியல் துறை பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார்.
 
அதனையடுத்து லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக துணைவேந்தர் கணபதியை போலீசார் நேற்று கைது செய்தனர். அந்நிலையில் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூர பொறுப்பு இயக்குநர் மதிவாணன் மீது, சந்தேகத்தின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதிவாணன், கைது செய்யப்பட்ட பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியின் உறவினர் ஆவார். மதிவாணனிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.  
 
இந்நிலையில், பாரதியார் பல்கலைக்கழக பணி நியமனங்களில் ரூ.30 கோடி வரை லஞ்சப் பணம் கை மாறியிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லஞ்சம் பணத்தை பெற்றுக்கொண்டு 80 பேர் பேராசிரியர்கள், உதவி, இணை பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.
 
துணை வேந்தர் ஒருவரே இத்தனை கோடி லஞ்ச புகாரில் சிக்கியிருப்பது தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்