ஓட ஓட விரட்டி இளைஞரை குத்தி கொலை-சிசிடிவி காட்சிகளை வைத்து போலீஸ் தேடுதல்வேட்டை!

J.Durai

வெள்ளி, 26 ஜூலை 2024 (17:04 IST)
சிவகங்கையை அடுத்துள்ள பில்லுரை சேர்ந்தவர் ராஜபாண்டி (42) இவரது மனைவி லலிதா ( 38) இவர்களுக்கு முத்துச்செல்வி (17) கீர்த்திகா (12) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.
 
ராஜபாண்டி சிவகங்கை காளவாசல் பகுதியில் தங்கியிருந்து சொந்தமாக சரக்கு வாகனம் வாங்கி ஓட்டி வருகிறார். 
 
இரவு 7 மணி அளவில் ராஜபாண்டி மற்றும் சிலருடன் சிவகங்கை வடக்கு ராஜ வீதியில் (மரக்கடை வீதி) பகுதியில் பேசிக் கொண்டிருந்தார் அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது அதில் ராஜபாண்டியை 2 பேர் கத்தியால் குத்த வந்த போது ராஜபாண்டி அங்கிருந்து தப்பி அருகில் உள்ள பெயிண்ட் கடை ஒன்றுக்குள் உயிர் பிழைக்க புகுந்தார்.
அவரை பின்தொடர்ந்து விரட்டிவந்த இரண்டு பேரும் ராஜபாண்டியை கடைக்குள் கீழே தள்ளி கத்தியால் சரமாரியாக குத்தினார்கள் இதில் ராஜபாண்டி சம்பவ இடத்தில் இறந்தார் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி, கடைகளும் அதிக அளவில் இருக்கும் பகுதியில் கொலை சம்பவம் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
தகவல் கிடைத்தது  போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணமாக கிடந்த ராஜபாண்டியன் உடலை பிரேத பரிசோதனைக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
சிவகங்கை நகரைப் பொறுத்தவரை நேற்று இரவு நேருபஜாரில் அசுரப் அலி என்பவர் கொலை செய்யப்பட்டார்.
 
அதனை தொடர்ந்து மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை நடந்ததும் அந்த பகுதியில் இருந்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. 
 
இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி தப்பி ஓடிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
 
கொலைக்கான காரணம் பண பிரச்சனையா? அல்லது முன் பகையா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்