போராட்டம் ஓயாது.. உயர்த்திய கொடிகள் தாழாது! – மக்கள் நீதி மய்யம் 7-வது ஆண்டில் கமல்ஹாசன் பதிவு!

Prasanth Karthick

புதன், 21 பிப்ரவரி 2024 (11:48 IST)
மக்கள் நீதி மய்யம் தொடங்கி 6 ஆண்டுகள் முடிந்து 7வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கும் நிலையில் கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.



தமிழக அரசியலில் பல்வேறு நடிகர்களும் அவ்வபோது கட்சி தொடங்குவது பல காலமாகவே நடந்து வருகிறது. நடிகர் கமல்ஹாசனும் தனது அரசியல் ஆர்வத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்த நிலையில் 2018ம் ஆண்டில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல்களை எதிர்கொண்டிருந்தாலும் அவற்றில் இதுவரை வெற்றி என எதையும் பதிவு செய்திருக்கவில்லை.

இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் 7வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் “மக்கள் நீதி மய்யம் இன்று ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

ALSO READ: சென்னை மாநகராட்சி பட்ஜெட் தாக்கல்..! 82 புதிய அறிவிப்புகள் வெளியீடு..!!
 
கட்சி ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இருபெரும் தேர்தல்களை எதிர்கொண்டோம். பண பலமோ, ஊடக பலமோ, முன் அனுபவமோ சிறிதும் இன்றி மக்களைச் சந்தித்தோம். கவனம் ஈர்க்கும் வகையில் வாக்குகளைப் பெற்றோம். மக்களுக்கு அவர்களுடைய கடமையை நினைவுறுத்துவதும், தலைமைக்குத் தயார்படுத்துவதும் தேர்தல் வெற்றிகளை விட முக்கியமானது. ஜனநாயகத் தேரை நாம் அனைவருமே சேர்ந்துதான் இழுக்கவேண்டும் என்கிற உணர்வை ஊட்டுவதே அவசியம் மிக்க அரசியல் செயல்பாடு.

மக்கள் நீதி மய்யத்தைப் போன்ற ஜனநாயக சக்திகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் இருக்கிறது. சாதி மதச் சழக்குகள் இருக்கும்வரை, வடக்கு தெற்கு பேதம் வாழும் வரை, ஊழலும் சீர்கேடுகளும் தொடரும் வரை நமது போராட்ட செயல்பாடுகள் ஓயாது. உயர்த்திய கொடிகள் தாழாது” என்று தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்