சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினா ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருதே! - தமிழிசை vs உதயநிதி வார்த்தை மோதல்!

Prasanth Karthick

ஞாயிறு, 20 அக்டோபர் 2024 (10:56 IST)

திருவண்ணாமலைக்கு உதயநிதி கிரிவலம் சென்றதாக தமிழிசை சௌந்தர்ராஜன் பேசிய நிலையில் அதுகுறித்து உதயநிதி பதில் அளித்துள்ளார்.

 

 

சமீபத்தில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் “பவன் கல்யாண் சொன்னதை போல தனது தவறுகளை திருத்திக் கொள்வதற்காக உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருக்கிறார்” என பேசியிருந்தார்.

 

தமிழிசை சௌந்தராஜனின் இந்த விமர்சனத்திற்கு தனது எக்ஸ் தள பதிவு மூலம் பதில் அளித்துள்ள துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “இந்நாள் ஆரியநர் செய்யும் சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால், முன்னாள் ஆளுநர் அக்காவுக்கு கோபம் வருகிறது!

 

அக்கா அவர்களே, திருவண்ணாமலையில் 

‘கிரி’வலம் வரும் பக்தர்களுக்கு எல்லா வசதிகளும் ‘சரி’யாக இருக்கிறதா என்று ஆய்வு தான் செய்தோம். நீங்கள் குதூகலிப்பது போல அது கிரிவலம் அல்ல  –  ‘சரி’ வலம்!

 

ஓடாத தேரை ஓட வைத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்!

 

ஆயிரக்கணக்கான கோவில்களுக்கு திருப்பணிச் செய்தவர் எங்கள் முதல்வர்!

 

‘எல்லோருக்கும் எல்லாம்’ என உழைக்கும் எங்களைப் போன்ற மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்தால், மக்களால் பல முறை நிராகரிக்கப்பட்ட அக்காவுக்கு கோபம் வரத்தான் செய்யும். நியாயம் தானே...!

 

நீங்கள் எவ்வளவு சத்தமிட்டாலும், அரசியலும் – ஆன்மீகமும் தமிழ்நாட்டில் என்றைக்கும் கலக்காது.

 

ஒன்றிய அரசின் ‘டி.டி. தமிழை’ப்போல் - அக்காவும் இந்திக்கு வக்காலத்து வாங்கும் துரோகத்தை, தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்