கீழடி ஆய்வறிக்கையை ஒன்றிய தொல்லியல்துறை திருப்பி அனுப்பியது குறித்து திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை அருகே கீழடியில் நடத்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த பழம்பொருட்கள் தமிழ் மக்களின் பண்பாடு, கலாச்சாரம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களாக அமைந்தது. இதுகுறித்து பெரும் ஆய்வு நடத்தப்பட்டு, அந்த ஆய்வறிக்கை மத்திய தொல்லியல்துறையிடம் சமர்பிக்கப்பட்டது.
ஆனால் அந்த அறிக்கையை மத்திய தொல்லியல்துறை ஏற்காமல் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்த மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், தமிழர் தொன்மைக்கு, கீழடி உண்மைக்கு என்றென்றும் எதிரியாக பாஜக செயல்படுவதாக கண்டனம் தெரிவித்தார்.
அதை மறுத்த பாஜக பிரமுகர் தமிழிசை சௌந்தர்ராஜன் ”கீழடு அகழ்வாய்விற்கு நிதி ஒதுக்கியதே மத்திய அரசுதான். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் வந்து அகழ்வாய்வை பார்வையிட்டார். சு.வெங்கடேசன் இந்த விவகாரத்தில் அரசியல் செய்யக்கூடாது” என பேசியிருந்தார்.
இந்நிலையில் கீழடி ஆய்வறிக்கை மத்திய தொல்லியல் துறையால் நிராகரிக்கப்பட்டது குறித்து பேசியுள்ள திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் “இந்தியாவின் பழங்கால வாழ்க்கை பற்றிய அறிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதன் மூலம், தமிழர்களின் தொன்மையையும், பெருமையையும் அங்கீகரிக்க அவர்களுக்கு மனம் வரவில்லை என தெரிகிறது. கீழடி அகழ்வாய்வின் அறிக்கையை அவர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்” என பேசியுள்ளார்.
Edit by Prasanth.K