தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, உயர்நிலை, மேல்நிலை, பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் மற்றும் பிரதிநிதிகள் சந்தித்ததாக தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மாயவன் பேட்டி அளித்தபோது, "தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளாக எங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எட்டு முறை தமிழ்நாடு முதல்வரைச் சந்தித்துள்ளோம்; அரசை நம்பி ஏமாற்றம் அடைந்துள்ளோம்.
எங்கள் சங்கத்தின் சார்பில் விரைவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்த உள்ளோம். இந்த போராட்டத்திற்கு முழு ஆதரவை தருவோம் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்றைய சந்திப்பின்போது தெரிவித்தார்," என்று கூறியுள்ளார்.
அதேபோல், பரந்தூரில் போராடும் மக்களின் பிரதிநிதிகளும் விஜயை சந்தித்ததாகவும், இந்த போராட்டத்திற்கும் தனது முழு ஆதரவு உண்டு என விஜய் தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால், விஜய் நேரடியாக போராட்டங்களில் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.