உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த தமிழக மாணவர்! – அதிர்ச்சியில் இந்தியா!

செவ்வாய், 8 மார்ச் 2022 (08:57 IST)
உக்ரைனில் போர் நடப்பதால் பலரும் வெளியேறும் நிலையில் தமிழக மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனில் உள்ள பிற நாட்டு மக்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாட்டு மக்களும் உக்ரைனுக்கு அருகே உள்ள நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விமானங்கள் மூலமாக சொந்த நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர்.

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேசன் கங்கா திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அண்டை நாடுகளுக்கு தப்பி வரும் இந்தியர்கள் விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தின் கோவையை சேர்ந்த மாணவர் ஒருவர் உக்ரைன் ராணுவத்தில் இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையை சேர்ந்த சாய்நிகேஷ் என்ற மாணவர் உக்ரைனில் விமானவியல் படித்து வந்துள்ளார். சிறுவயது முதலே ராணுவத்தில் இணையும் ஆர்வம் சாய்நிகேஷுக்கு இருந்த நிலையில் உயரம் குறைவாக இருந்ததால் இந்திய ராணுவத்தில் இணைய விண்ணப்பித்தபோது நிராகரிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வெளிநாட்டவரும் உக்ரைன் ராணுவத்தில் இணையலாம் என உக்ரைன் அழைப்பு விடுத்த நிலையில் உக்ரைன் ராணுவத்தில் அவர் இணைந்துள்ளார். இது இந்திய வெளியுறவு துறைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அதிகாரிகள் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்