ஒரே வழக்கை, மதுரை, சென்னை உயர்நீதிமன்றங்கள் விசாரித்தது ஏன்? கரூர் நெரிசல் வழக்கு குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

Mahendran

வெள்ளி, 10 அக்டோபர் 2025 (13:55 IST)
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சென்னை உயர் நீதிமன்ற அமர்வு இவ்வழக்கை கையாண்ட விதம் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.
 
கரூர் சம்பவம் வழக்குகள் ஏற்கனவே மதுரை உயர் நீதிமன்ற கிளையில் விசாரணையில் இருந்தபோது, சென்னை அமர்வு தலையிட்டு உத்தரவுகளைப் பிறப்பித்தது ஏன்? ஒரே நாளில் மதுரை மற்றும் சென்னை அமர்வுகள் எப்படி வெவ்வேறு உத்தரவுகளை பிறப்பித்தன? இந்த நடைமுறை என்ன?
 
பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மற்ற மனுக்கள் மீது உயர் நீதிமன்றம் அவசரமாக உத்தரவிட்டது ஏன்?
 
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், இது "கொடூரமான மரணம்" என்பதால் உயர் நீதிமன்றம் தலையிட்டதாக கூறினர். மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணைக் குழுவுக்கு தலைமை தாங்கும் அதிகாரி அஸ்ரா கார்க்கை நீதிமன்றமே தேர்வு செய்ததாகவும் விளக்கமளித்தனர்.
 
இந்த வழக்கு கிரிமினல் வழக்காகப் பட்டியலிடப்பட்டது 41 பேர் உயிரிழந்ததால்தான் என்றும் தமிழக அரசு பதிலளித்தது. வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான முக்கிய வழக்கை விடுத்து மற்ற மனுக்கள் மீது உத்தரவிட்டது ஏன் என்று உச்ச நீதிமன்றம் மீண்டும் கேள்விகளை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்