மின் தடையில்லாத மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது..! திமுக அரசு பெருமிதம்..!!

Senthil Velan

வெள்ளி, 31 மே 2024 (14:01 IST)
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு தமிழ்நாடு படைத்துள்ளதாக திமுக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்நாட்டில் 1933-ஆம் ஆண்டில் முதன்முதல் முகிழ்த்த மின்சாரம் இன்று தமிழ்நாட்டை வளப்படுத்திடும் வலிமைமிக்க சக்தியாகத் திகழ்கிறது.
 
இன்று நூற்றாண்டு நிறைவு விழா காணும் சரித்திர நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 1974-ஆம் ஆண்டில் அனைத்துக் கிராமங்களுக்கும் மின்சார இணைப்புகளை வழங்கி இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லாத கிராமங்களே இல்லை எனும் சாதனையைப் படைத்தவர். முத்தமிழறிஞர் கலைஞரின் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021-இல் ஆட்சிப் பொறுப்பேற்று திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறார். 
 
மின் உற்பத்திக்காகப் புதிய பல திட்டங்களை உருவாக்கி வருகிறார். 2021 முதல் மூன்றாண்டுகளில் 2 இலட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க ஆணையிட்டு வழங்கி வருகிறார். ஆட்சிப் பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டில் 32,595 மெகாவாட்டாக இருந்த தமிழ்நாட்டின் மொத்த மின் நிறுவுதிறன் திராவிட மாடல் ஆட்சியின் திட்டங்களால் 36,671 மெகாவாட் என அதிகரித்துள்ளது.
 
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்குத் தடையற்ற மின்சாரத்தை வழங்குவதில் ஆர்வம் கொண்டு செயல்படுத்தும் முனைப்பான திட்டங்களால் மின் வாரியத்திற்குச் சொந்தமான அனல் மின் நிலையங்களின் மூலம் 2020-21-ல், உற்பத்தி செய்யப்பட்ட 15,554 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம், 2021-22ஆம் ஆண்டில் 20,391 மில்லியன் யூனிட்டுகளாக இது 31.1 சதவீதம் ஆகும். இது 2022-23 ஆம் ஆண்டில் 22,689 மில்லியன் யூனிட்டுகளாக 11.27 சதவீதம் அதிகரித்தது. மேலும், 2023-24 ஆம் ஆண்டில் 25.479 மில்லியன் யூனிட்டுகள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இது 12.3 சதவீதமும் அதிகரித்து தொடர்ந்து சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. 
 
2.36 கோடி வீட்டு நுகர்வோர்களுக்கு. 1.7.2023 முதல் 2.18 சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஏற்படும் நிதிச்சுமையை மக்களிடம் சுமத்தாமல் திராவிட மாடல் அரசே ஏற்று மக்களைக் காத்துள்ளது. பொதுமக்களிடம் படிக்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வணிக ரீதியில் இயங்காத நூலகங்களுக்கான மின் கட்டணத்தினை மானியம் இல்லா வீட்டு விகிதப்பட்டியலில் கணக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு 30 சதவீத கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் இயங்கிவரும் பல நூலகங்கள் பயனடைந்துள்ளன.

ALSO READ: டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்..! உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு முறையீடு..!!

இப்படி, மூன்றாண்டுகளாக மின் தடையே இல்லை எனும் வரலாறு படைத்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்துள்ள சீர்திருத்தங்களால் புதியதாக துணை மின் நிலையங்களை நிறுவி, மின் மாற்றிகளை அமைத்து, மின்விநியோக அமைப்புகள் சீராகச் செயல்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் இந்த அரசைப் பாராட்டுகின்றனர்  எனத் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்