இவருக்குதான் எங்க முழு ஆதரவு.. ஒருவழியாக அறிவித்த பாஜக!

செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (13:42 IST)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக ஆதரவு யாருக்கு என்பது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடங்கியுள்ளன. பல்வேறு கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து வரும் நிலையில் இரண்டாக பிரிந்துள்ள அதிமுகவும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்தது.

எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் செந்தில் முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதால் இருவரில் யார் அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற குழப்பம் எழுந்துள்ளது.

இதுகுறுத்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களை கொண்டு வாக்கெடுப்பு நடத்தி வேட்பாளரை தேர்வு செய்யும்படி கூறப்பட்டது. அதன்படி பொதுக்குழு உறுப்பினர்கள் இடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு தேர்வான நிலையில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் தனது வேட்புமனுவை திரும்ப பெற்றார்.

இந்த இழுபறிகளால் பாஜக தனது ஆதரவு யாருக்கு என்பதை சொல்லாமல் இருந்து வந்தது. தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தென்னரசு தேர்வாகியுள்ள நிலையில் அவருக்கு தங்கள் முழு ஆதரவை வழங்குவதாக பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பொதுநலன் மற்றும் கூட்டணியின் நலன் கருதி வேட்பாளரை வாபஸ் பெற செய்த ஓ.பன்னீர்செல்வத்திற்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்