தமிழகம் முழுவதும் இன்று வீரன் அழகுமுத்துக்கோனின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், பல அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளைச் செய்து வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
"வீரமும் தீரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்கள், தாய் நிலத்தின் உரிமைக்காகவும், அடிமை விலங்கை அகற்றிய விடுதலைப் போராட்டத்திற்காகவும், தலை வணங்காமல் தடம் மாறாத் தோள்களுடன் வீரமாகப் போரிட்டவர்.
வரியும் செலுத்த முடியாது! மன்னிப்பும் கேட்க முடியாது!' என்று வெள்ளையர்களிடம் வீறாப்புடனும் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமர்த்தி, குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில், அவரது வீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம்" என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.