வளிமண்டல மேலடுக்கு நகர தொடங்கிவிட்டது.. இனி மழை அவ்வளவுதான்: தமிழ்நாடு வெதர்மேன்

செவ்வாய், 19 டிசம்பர் 2023 (07:55 IST)
தென் மாவட்டங்களில் இருந்த வளிமண்டல மேலடுக்கு நகர தொடங்கிவிட்டது என்றும் இனி தென் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது என்றும் எனவே நிவாரண பணிகளை தாராளமாக தொடங்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழை கொட்டியது. குறிப்பாக காயல்பட்டினத்தில் ஒரே நாளில் ஒரு ஆண்டுக்குப் பெய்ய வேண்டிய மழை பெய்ததால் வெள்ளக்காடாக உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைத்தளத்தில் தூத்துக்குடி நெல்லை போன்ற தென் மாவட்டங்களில் வரலாறு காணாத மழையை கொடுத்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அரபிக் கடல் நோக்கி நகர தொடங்கிவிட்டது என்றும் எனவே இனிமேல் மழை பெரிய அளவில் இருக்காது என்றும் நிவாரண பணிகளை தொடங்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் வேதாரண்யம், கோடியக்கரை முதல் ராமேஸ்வரம் வரை இன்று மழை பெய்ய வாய்ப்பு என்றும் கூறினார். சென்னையை பொருத்தவரை இன்று வறண்ட வானிலை தான் இருக்கும் என்றும்  மழை பெய்ய வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்