போராட்ட களமாக மாறிய தமிழகம்.. சட்டம் திரும்ப பெறப்படுமா??

Arun Prasath

வியாழன், 19 டிசம்பர் 2019 (08:49 IST)
குடியுரிமை திருத்த சட்டம் திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் வெகு தீவிரமாக இறங்கி வருகின்றனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராட்டங்கள் நடத்தி வரும் நிலையில், தமிழகத்திலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னை நியூ கல்லூரியில் நேற்று தீவிரமாக போராட்டத்தை ஆரம்பித்தனர் மாணவர்கள், அவர்களை தொடர்ந்து திருச்சி வளனார் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

மேலும் நேற்று குடியுரிமை சட்டத்திற்கு எதிராக கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் குதித்த மாணவர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். கடந்த மூன்று நாட்களாக போராடி வந்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களை இன்று அதிகாலை போலீஸார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று அறிவுரை கூறி அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

எனினும் நாட்டில் எவ்வளவு போராட்டம் நடந்தாலும் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யப்படாது என அமித் ஷா தெளிவாக கூறியுள்ளதால், மாணவர்களின் போராட்டமும், எதிர்கட்சிகளின் போராட்டமும் எந்த அளவுக்கு மாற்றத்தை கொண்டு வரும் என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்