சேலத்தைச் சேர்ந்த 55 வயது மீனா என்பவர் 15க்கும் மேற்பட்ட பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில், திடீரென கூட்டமாக வந்த தெரு நாய்கள், ஒரு பசுமாட்டை கடித்து குதறின. கழுத்து மற்றும் பின் பகுதியில் ஏற்பட்ட ரத்த காயங்களுடன் அது கிடந்தது. வெறிநாய்கள் கடித்ததன் தாக்குதலால் சில நிமிடங்களில் அந்த பசுமாடு உயிரிழந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மீனா கதறி அழுதார். பின்னர், கால்நடைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக இருப்பதாகவும், உடனடியாக கால்நடைகளையும் மனிதர்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
"மாடுகளை வைத்தே நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். ஏற்கனவே சில மாடுகளை நாய்கள் கடித்த நிலையில், அதை விரட்டியிருக்கிறேன். ஆனால் நேற்று இரவு நாய்கள் மீண்டும் கடித்தது எனக்குத் தெரியவில்லை. இன்று காலை வந்து பார்த்தபோது, மாடு இறந்திருந்தது," என்று மீனா கூறினார்.