ஜெ. மரணம் குறித்து விசாரித்தால் சசிகலாவுக்கு ஆயுள் தண்டனைதான்: ஸ்டாலின் ஆவேசம்!

வியாழன், 23 பிப்ரவரி 2017 (09:10 IST)
நேற்று தமிழகம் முழுவதும் திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்ததும் போடும் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணம் குறித்தான நீதி விசாரணைக்கு தான் என்றார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணத்தில் இன்று வரை விடை தெரியாத பல்வேறு மர்மங்கள் உள்ளது. விளக்கம் அளிக்க கூடிய இடத்தில் உள்ளவர்கள் அதற்கான உரிய விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் பொதுமக்கள் மத்தியில் அவரது மரணம் குறித்த சந்தேகம் மேலும் வலுத்து வருகிறது.
 
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதிவிசாரணை நடத்தப்படும் என்று கூறினார். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் இன்று உண்ணாவிரத்தத்தில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சி அமைந்தால் எங்கள் முதல் கையெழுத்து ஜெயலலிதா மரணத்தின் மீதான நீதிவிசாரணை குறித்த கையெழுத்துதான் என்றார். மேலும் நீதிவிசாரணை நடத்தினால் பெங்களூரு சிறையில் உள்ளவர்கள் ஆயுள் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை வரும் என்றும் அவர் கூறினார். இது அரசியல் வட்டாரத்தில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்