ஆன்மீக ஆட்சி தமிழகத்தில் பாஜக தலைமையில் அமையும்- பாஜக நிர்வாகி சிவசுப்பிரமணியன்

செவ்வாய், 5 ஜூலை 2022 (23:26 IST)
சிவனே மறு உருவம் எடுத்து அண்ணாமலையாக தமிழக பாஜக தலைவராக வந்துள்ளார் என்றும் ஒரிரு ஆண்டுகளில் ஆன்மீக ஆட்சி தமிழகத்தில் பாஜக தலைமையில் அமையும் என்றதோடு, அண்ணாமலையை மறைமுகமாக சாடுபவர்களை மனநிலை இல்லாதவர்கள் என்றும் பாஜக நிர்வாகி சிவசுப்பிரமணியன் பேச்சு.
 
கரூர் மாவட்ட பாஜக சார்பில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக தலைமையிலான மாநில அரசினை கண்டித்து மாபெரும் உண்ணாவிரதப்போராட்டத்தினை கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பு காலை முதல் மாலை வரை நடைபெற்றது. காலையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் மாலை வரை யாரும் எழுந்து செல்லவில்லை, அதே நேரத்தில் கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில் நாதன் கருப்பு சட்டை அணிந்து திமுக விற்கு எதிர்ப்பினை தெரிவித்து, உண்ணாவிரதப்போராட்டத்தில் கலந்து கொண்டார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சிவசுப்பிரமணியன் பேசும் போது, கரூர் மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டத்தினை நான் இதுவரை இப்படி பிரமாண்டமாக கண்டதில்லை என்றதோடு, கரூர் மாவட்ட பாஜக தலைவர் மிகப்பிரமாண்டமாய், தமிழகமே பாராட்டும் அளவிற்கு மாபெரும் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தியுள்ளார். தமிழகத்தில் 60 மாவட்டங்களில் நடைபெற்று வந்த இந்த பாஜக உண்ணாவிரதப்போராட்டத்தில் கரூரில் மிகவும் சிறப்பாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். மேலும், சிவனின் அவதாரம் தான் அண்ணாமலை என்றும், திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருள்மிகு சிவபெருமானே தற்போது தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையாக வந்துள்ளார். ஆகவே, தமிழக அளவில் ஆங்காங்கே சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றார். தமிழ் என்றால், தேவாரமும், திருவாசகமும் தான் தமிழ், ஆகவே, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தந்தையே, திருவாசகத்தினையும், தேவாரத்தினையும் ஓதியவர், ஆகவே, இறைவழிபாட்டினையும், தமிழையும் பிரித்து விட்டார். அது ஏதோ, ஒரு தீவினை காலமாக தான் நாம் நினைக்க வேண்டும், தமிழ் தான் ஆன்மீக மொழி, தமிழ் தான் ஆன்மீகம் என்றதோடு, அப்படி பட்ட தமிழகத்தில் மீண்டும் ஆன்மீக ஆட்சி வந்து விடும் என்று உறுதிபட தெரிவித்தார். அது போல, சுவாமி விவேகானந்தர் கூறியதை போல, என்னிடம் 100 இளைஞர்களை கொடுங்கள், நாட்டை நல்ல நாட்டாக மாற்றி காட்டுகின்றேன் என்றார். அது போல, விவேகானந்தரின் சிறு வயது பெயர் நரேந்திரன், அவரே 100 ஆண்டுகள் கழித்து நரேந்திர மோடியாக இந்தியாவினை ஆட்சி செய்து வருவதாக தெரிவித்த, சிவசுப்பிரமணியன், இது இறை செயல் என்றார். தமிழகத்தில் லெட்சுமணன் பாஜக விற்கு வந்தார். அவருக்கு பின்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வந்தார். பின்பு இருவரும் வேண்டாம் என்று கணேசனாக இருக்கும் இல.கணேசன் வந்தார். அப்புறம் கிருபாநிதி வந்தார். மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் வந்தார். அவர் கிருஷ்ணபரமாத்மா வின் உருவம், பின்னர் தமிழகம் இசைக்கு மயங்கிய நிலையில் தமிழிசையை அனுப்பினார்கள். ஆகவே, பின்னரும் தமிழகத்தினை காப்பற்றவில்லை பின்னர் முருகன் வேல் எடுத்து கொண்டு வந்தார். அவராலும் தமிழகத்தினை சரி செய்ய வில்லை, பின்னர் முருகன், கணேசன், ராதாகிருஷ்ணன் என்று எல்லோரையும் அனுப்பி ஒன்றும் ஆக வில்லை என்று நினைத்து பின்னர் சிவனே களத்தில் இறங்கி, அண்ணாமலையாக, தமிழகத்தின் பாஜக தலைவராக உருவெடுத்து வந்துள்ளார். சிவனை விட ஒரு கடவுள் உள்ளாரா ? நமச்சிவாயம் என்ற சொல்லிற்கு ஈடு இருக்கின்றதா ? ஆகவே அண்ணாமலை அவர்கள், அண்ணாமலை ஆட்சி இல்லை, தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என்பதற்கு இன்று தமிழக அளவில் நடைபெற்ற இந்த உண்ணாவிரத போராட்டமே சாட்சி என்றார். 
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய, பாஜக கரூர் மாவட்ட பார்வையாளர் சிவசுப்பிரமணியன், தமிழகத்தினை ஆளும் திமுக ஆட்சி மனசாட்சி இல்லாமல், இருக்கின்றது, மக்களிடம் கூறிய 231 பக்கங்கள் கொண்ட வாக்குறுதிகளை மக்களிடம் கொடுத்து விட்டு, பின்பு அதை செய்யாமல் இருப்பது மனசாட்சி இல்லாத செயல், ஆகும், என்றதோடு, கடந்த சில தினங்களுக்கு முன்னர், கரூருக்கு நலத்திட்ட உதவிகளை கொடுக்க வந்த திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், பாஜக தலைவரை மறைமுகமாக சாடியுள்ளார் என்று கேள்வி கேட்டதற்கு, மறைமுகமாக சாடுபவர்களுக்கு பெயர் என்ன ? என்று செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டதோடு, அவர்களுக்கு மனநிலையும் தைரியமும் இல்லை என்று கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்