எடிட்டிங் இல்லாமல் நேரலை வேண்டும். சட்டசபை நிகழ்வுகள் குறித்து அரவிந்தசாமி

புதன், 22 பிப்ரவரி 2017 (04:52 IST)
கடந்த சில நாட்களாகவே கமல்ஹாசன் உள்ளிட்ட சில நடிகர்கள் தமிழக அரசியல் நிகழ்வுகள் குறித்து தங்கள் கருத்துக்களை டுவிட்டரில் வெளியிட்டு வருகின்றனர். இவற்றில் சில கருத்துக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருவதோடு அரசியல்வாதிகளின் விமர்சனத்தையும் பெற்று வருகிறது.




இவ்வாறு கருத்துக்களை சொல்லி பரபரப்பை ஏற்படுத்துபவர்களில் ஒருவர் நடிகர் அரவிந்தசாமி. இந்நிலையில் சட்டசபை நிகழ்வுகளை நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்றும்
சட்டசபையில் நடக்கும் நிகழ்வுகளை நேரலையில் பார்க்கும் உரிமை மக்களுக்கு உள்ளது என்றும் சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் நடந்த எடப்பாடி பழனிச்சாமியின் அரசு கோரிய நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒருசில குறிப்பிட்ட நிகழ்ச்சிகளை மட்டும் எடிட் செய்து வெளியிடப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இதுகுறித்து நடிகர் அரவிந்த்சாமி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: 'சட்டசபை நடக்கும் நிகழ்ச்சிகளை எந்த வித எடிட்டிங்கும் இல்லாமல் நேரலையில் ஒளிப்பரப்ப வேண்டும். மக்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளது போல சட்டசபை நிகழ்ச்சிகளை பார்த்து அவர்களது முடிவை எடுத்து கொள்வதற்கும் உரிமை உள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்

வெப்துனியாவைப் படிக்கவும்