தீபா போஸ்டர்களை அச்சடிக்கக் கூடாது; வாய்மொழி உத்தரவா?: உயர்நீதிமன்றத்தில் மனு

ஞாயிறு, 12 பிப்ரவரி 2017 (08:03 IST)
ஜெயலலிதாவின் உறவினர் தீபாவின் புகைப்படம், பெயர் இடம்பெறும் போஸ்டர்களை அச்சிடுவதை தடுக்க கூடாது என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 

இதுதொடர்பாக வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகாவில் உள்ள செம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரகுநாத ரெட்டி என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அவரது அண்ணன் மகள் தீபாவை அரசியலுக்கு வரும்படி, ஜெயலலிதா ஆதரவாளர்களான நாங்கள் வலியுறுத்தினோம். இதை ஏற்று புதுக்கட்சி குறித்த அறிவிப்பை ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24ம் தேதி அறிவிக்க இருப்பதாக தீபா தெரிவித்துள்ளார்.

தீபாவின் வளர்ச்சியை சகிக்க முடியாமல், அவரது புகைப்படம், பெயர் இடம்பெறும் வகையில் போஸ்டர்கள் எதையும் அச்சிடக் கூடாது என ஆளுங்கட்சியின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் வாய்மொழியாக அச்சகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இது, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. எனவே, தீபாவின் புகைப்படம், பெயருடன் போஸ்டர்கள் அச்சிடும் அச்சகங்களின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது என தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்