பல கேச பாத்தவன் நான், இது எனக்கு ஒன்னுமே இல்ல... அசால்ட் சீமான்!!

திங்கள், 14 அக்டோபர் 2019 (13:49 IST)
பல வழக்குகளை சந்தித்துவிட்டேன், இது ஒன்றுமே இல்லை என ராஜீவ் காந்தி குறித்து பேசியதற்கு தன் மீது போடப்பட்டுள்ள வழக்கு குறித்து சீமான் பேட்டியளித்துள்ளார். 
 
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராஜீவ் காந்தி குறித்து பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. 
 
சீமானின் இந்தப் பேச்சு தமிழக அரசியல் சூழ்நிலையில் கடுமையான அதிர்வலைகளை எழுப்பியது. அதோடு, காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனங்களை தெரிவித்ததோடு தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளித்துள்ளது. இதனை தொடர்ந்து சீமான் மீது 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டு போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 
இந்நிலையில் இந்த சர்ச்சைக்கு மேலும் சர்ச்சையாக பதில் அளித்துள்ளார் சீமான். அவர் கூறியதாவது, இதுபோன்று பல வழக்குகளை நான் சந்தித்துவிட்டேன். எனக்கு இது ஒன்றுமே இல்லை. நான் பேசியதில் இப்போது என்ன கலவரம் ஆகிவிட்டது? காங்கிரஸ் கட்சியில்தான் கொந்தளிப்பு வந்துள்ளது. 
 
ப.சிதம்பரத்தை வெளியில் கொண்டுவரவும் என்னை உள்ளே தள்ளவும்தான் காங்கிரஸார் போராடுகிறார்கள். காங்கிரஸ் எந்த பிரச்சனைக்காக போராடியுள்ளனர். இதற்காவது காங்கிரஸ் போராடுவது மகிழ்ச்சி. நான் வழக்கை சட்டப்படி சந்திப்பேன். 
 
அதேபோல், ராஜிவ்காந்தி குறித்து பேசியதை நான் திரும்பபெற மாட்டேன். எங்கள் இனத்தின் தலைவர் பிரபாகரன். எனவே பிரபாகரனை முன்வைத்துதான் எங்களது அரசியல் பரப்புரை இருக்கும் என பதில் அளித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்