சீமான் வீட்டுக்குப் போலிஸ் பாதுகாப்பு – உருவ பொம்மையை எரித்த காங்கிரஸ் தொண்டர்கள் !

திங்கள், 14 அக்டோபர் 2019 (13:35 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சீமான் மேல் 2 பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொனட சீமான் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவரது பேச்சின் ஒரு பகுதியில் ‘ஆமாம்... நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம். ஒருநாள் வரலாறு திரும்ப எழுதப்படும். அப்போது, இந்திய ராணுவத்தை அமைதி படை என்ற பெயரில் அனுப்பி தமிழின மக்களை அழித்தொழித்த, தமிழின துரோகி ராஜீவ் காந்தியைத் தமிழ் மண்ணிலேயே கொன்று புதைத்தோம் என வரலாறு எழுதப்படும்’ என பேசினார்.

சீமானின் இந்தப் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்வினைப் புரிந்து வருகிறது. சீமானைத் தேசதுரோக வழக்கில் கைது செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் அங்கிகாரததை நீக்க வேண்டும் எனவும் கூறி தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுமட்டுமில்லாமல் தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களும் தனித்தனியாக பல புகார்களை அளித்து வருகின்றனர். வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுதல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் விக்கிரவாண்டி காவல்நிலையத்தில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காங்கிரஸ் தொண்டர்கள் சீமானின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்கும் வண்ணம் சீமானின் வீட்டுக்கும் கட்சி அலுவலகத்துக்கும் போலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தனது பேச்சுக்கு சீமான் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்