என் மீது மிகுந்த பாசம் கொண்டவர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார்! – சீமான் இரங்கல்!

திங்கள், 28 டிசம்பர் 2020 (15:59 IST)
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாய் கரீமா பேகம் காலமான நிலையில் அவருக்கு இரங்கல் தெரிவித்து சீமான் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்திய சினிமா மட்டுமல்லாது உலக சினிமாவிலும் தனது இசையால் தனக்கென தனி தடம் பதித்தவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான். இவரது தயார் கரீமா பேகம் தற்போது காலமான செய்தி ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலரை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் ஏ.ஆர்.ரஹ்மான் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் மூலமாக தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் “அன்புச்சகோதரர் ஏ.ஆர்.ரகுமான், அன்புச் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா ஆகியோரது தாயார் கரீமா பேகம் அவர்கள் மறைவுற்ற செய்தியறிந்து பெரும் துயரமடைந்தேன். இந்நூற்றாண்டின் ஈடு இணையற்ற இசை மேதைகளுள் ஒருவராகத் திகழ்கிற ஆகச்சிறந்த தமிழ் மகனைப் பெற்றெடுத்த தாயாரின் மறைவு பெரிதும் என்னை வாட்டுகிறது.” என தெரிவித்துள்ளார்.

மேலும் “அம்மா கரீமா பேகம் அவர்களைச் சந்தித்ததில்லை என்றாலும், அவர் என் மீது பேரன்பு கொண்டிருந்தார் என்பதை சகோதரி ரைஹானா கூறக் கேள்வியுற்று நெகிழ்ந்திருக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து துயரில் பங்கெடுக்கிறேன். அம்மாவுக்கு எனது கண்ணீர்வணக்கம்!” என கூறி இரங்கல் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்