மதுரை முருக பக்தர்கள் மாநாடு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதன் நிலைபாட்டில் தங்களுக்கு தொடர்பில்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.
மதுரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து நடத்திய நிலையில், அதில் அதிமுக பிரமுகர்களும், முன்னாள் அமைச்சர்களும் கலந்துக் கொண்டனர். அந்த மாநாட்டில் அண்ணா, பெரியார் குறித்த சர்ச்சைக்குரிய காணொளி ஒளிபரப்பானது. ஆனால் அதற்கு அதிமுகவினர் எந்த ரியாக்ஷனும் செய்யாமல் அமர்ந்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அங்கு ஒளிபரப்பப்பட்ட வீடியோவின் கருத்தில் தங்களுக்கு எந்த உடன்பாடும் இல்லை என்றும், கூட்டணி உறவின் அடிப்படையிலேயே கலந்து கொள்ள சென்றதாகவும் அதிமுக பிரமுகர்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ”முருகன் மாநாட்டில் எந்தவிதமான அரசியல் கலப்பும் இருக்காது என்ற நம்பிக்கையில்தான் அதில் கலந்துக் கொள்ள சென்றோம். அந்த முருகர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவற்றை அதிமுக ஏற்கவில்லை, நாங்கள் எங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறோம்.
அண்ணா, ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதற்காக எடப்பாடி பழனிசாமி என்ன முடிவு எடுத்தார் என்பது தமிழகத்திற்கே தெரியும்” என பேசியுள்ளார்.
அண்ணா, ஜெயலலிதா குறித்து பாஜகவினர் அவதூறாக பேசியதை கண்டித்த எடப்பாடி பழனிசாமி 2023ம் ஆண்டில் பாஜகவுடனான கூட்டணியை முறித்தார். தற்போது அப்படியான நிலையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள் என பாஜகவை ஆர்.பி.உதயக்குமார் மறைமுகமாக எச்சரிப்பதாக கூறப்படுகிறது.
Edit by Prasanth.K