மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ஆண் ஊழியர்: மறுத்ததால் கொலை!

சனி, 9 செப்டம்பர் 2017 (16:41 IST)
டெல்லியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவர் அந்த பள்ளி ஊழியர் ஒருவரால் பள்ளி கழிவறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
டெல்லி குருகிராமில் உள்ள ரியான் இண்டர்நேஷனல் பள்ளியில் பிரத்யுமன் தாக்கூர் என்ற 7 வயது மாணவன் 2-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்த மாணவன் நேற்று பள்ளியின் கழிவறையில் கொடூரமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
 
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளியின் சிசிடிவி வீடியோக்களை சோதனை செய்தனர். பள்ளியின் பேருந்து ஓட்டுநருக்கு உதவியாளராக இருக்கும் 42 வயதான அசோக் குமார் என்பவரைக் கைது செய்தனர்.
 
அசோக் குமாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கழிவறையில் இருந்த போது அங்கு பிரத்யுமன் தாக்கூர் என்ற மாணவன் வந்துள்ளான். அந்த மாணவனை பாலியல் பலாத்காரம் செய்ய அசோக் குமார் முயன்றுள்ளார். இதற்கு மாணவன் மறுத்தால் தன்னிடமிருந்த கத்தியால் மாணவனின் கழுத்தை அறுத்துள்ளார்.
 
இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மீது அதிருப்தி எழுந்துள்ளது. பள்ளி நிர்வாகம் உடனே செயல்படாததால் மாணவன் இறந்ததாக மாணவனின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து இந்த கொலையை கண்டித்து பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்