முதல்வர் ஓபிஎஸ்-ஐ தொடர்ந்து அவமானப்படுத்தும் சசிகலா!

திங்கள், 30 ஜனவரி 2017 (12:04 IST)
தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ளார். இது தமிழக மக்களை அவமானப்படுத்துவதாகும் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.


 
 
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் அந்த கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் தமிழக முதல்வரும் அதிமுக பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதில் சசிகலா மற்றும் அவைத்தலைவர் மதுசூதனனுக்கு மட்டும் தனி இருக்கை கொடுக்கப்பட்டது. இதில் முதல்வர் பன்னீர்செல்வம் கூட்டத்தோடு கூட்டமாக அமர வைக்கப்பட்டார்.
 
ஜெயலலிதா இருக்கும் போது நடைபெறும் கூட்டங்களில் அவருக்கு அருகில் பன்னீர்செல்வத்துக்கு இருக்கை ஒதுக்குவார் ஜெயலலிதா. ஆனால் அவரது மறைவிற்கு பின்னர் முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தை கூட்டத்தோடு கூட்டமாக அமர வைத்திருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடையே பேசிய தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில், தனக்கு தனி இருக்கை போட்ட சசிகலா, கூட்டத்துடன் முதல்வரை அமர செய்தது பன்னீர்செல்வத்துக்கு அவமானம் இல்லை, தமிழக மக்களை அவமதிப்பதாகும். இது கண்டனத்துக்குரியது என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்