பசுமை பள்ளிகளாக மாறும் 26 அரசு பள்ளிகள்: ரூ.5.20 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு

Mahendran

செவ்வாய், 3 செப்டம்பர் 2024 (16:05 IST)
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற ரூ.5.20 கோடியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
 
தமிழ்நாட்டில் உள்ள 26 அரசு பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தமாக ரூ.5.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சூரிய ஆற்றலின் உதவியுடன் மழை நீர் சேகரிப்பை நடைமுறைப்படுத்துதல், மக்கும் உரம் தயாரித்தல், காய்கறி மற்றும் மூலிகைத் தோட்டங்கள் உருவாக்குதல் உள்ளிட்ட பசுமைப் பணிகளை இப்பள்ளிகள் மேற்கொள்ளும். மேலும் பள்ளிகளின் அனைத்து மின்தேவைகளும் சூரிய
ஆற்றல் உற்பத்தி மூலம் பெறப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் தயங்கி வந்த நிலையில் தற்போது அரசு பள்ளிகளின் தரம் உயர்ந்து உள்ளதால் பெற்றோர்கள் மிகவும் விருப்பத்துடன் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் படிப்படியாக பசுமை பள்ளிகளாக மாறும் நிலையில் இன்னும் அதிகமாக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் பசுமை பள்ளியாக மாற்ற வேண்டும் என்பதே தமிழக அரசின் திட்டமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்