18 வயது இளம் பெண்ணுக்கு புது வாழ்வு.. ரேலா மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை..!

Siva

திங்கள், 21 அக்டோபர் 2024 (17:58 IST)
இதற்கு முன்பு ஏற்பட்ட காசநோய் தொற்றின் பின்விளைவாக இரு நுரையீரல்களிலும் சேதத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையான இரு பக்க நுரையீரல் மூச்சுக் குழாய் தளர்ச்சியினால் கடும் சிரமத்தை எதிர்கொண்டு வந்த தூத்துக்குடியைச் சேர்ந்த 18 வயதான இளம் பெண்ணுக்கு ஒரு சிக்கலான இரு பக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை ரேலா மருத்துவமனை வெற்றிகரமாக மேற்கொண்டிருக்கிறது. 
 
சண்முகப்பிரியா என்ற இப்பெண், 8 வயதாக இருந்தபோது, காசநோய் தொற்று ஏற்பட்டது.  தொடக்கத்தில் அவரது சொந்த ஊரில் ஒரு பொது மருத்துவரால் மருந்தின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.  எனினும், அவரது நிலைமை மோசமானதால், ஊடுருவல் அல்லாத ஆக்சிஜன் ஆதரவு வீட்டில் அவருக்கு தேவைப்பட்டது. அதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 24x7 அடிப்படையில் ஆக்சிஜன் ஆதரவு பெற வேண்டிய சூழ்நிலை உருவானது.
 
மூளைச்சாவடைந்த ஒரு நோயாளியின் நுரையீரல்கள் தஞ்சாவூரிலிருந்து சேகரிக்கப்பட்டு, திருச்சிக்கு சாலை வழியாகவும் மற்றும் அதைத் தொடர்ந்து, சென்னைக்கு பயணியர் விமான சேவை வழியாகவும் மொத்தத்தில் 2 மணி நேரங்கள் மற்றும் 20 நிமிடங்கள் என்ற குறுகிய காலஅளவிற்குள் ரேலா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. 
 
ரேலா மருத்துவமனையின் இதய மற்றும் நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சை மற்றும் இதய மார்பறை அறுவைசிகிச்சை துறையின் இயக்குனர் டாக்டர். ஸ்ரீநாத் விஜயசேகரன் மற்றும் உறுப்பு மாற்று நுரையீரலில் பிரிவின் கிளினிக்கல் லீடு டாக்டர். ஐஸ்வர்யா ராஜ்குமார் ஆகியோர் தலைமையிலான மருத்துவ நிபுணர்களின் குழு 4 மணி நேரங்கள் காலஅளவில் இந்த இளம் பெண்ணுக்கு இந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
 
ரேலா மருத்துவமனையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் புரொஃபசர் முகமது ரேலா இது தொடர்பாக பேசுகையில், “இரு பக்க நுரையீரல் உறுப்புமாற்று சிகிச்சையை செய்வது எப்போதுமே ஒரு கணிசமான சவாலாக இருக்கும். இந்த நேர்வைப் பொறுத்தவரை, இந்த இளம் பெண்ணின் கடுமையான நுரையீரல் மிகை இரத்த அழுத்தப் பிரச்சனையின் காரணமாக, அது மேலும் அதிக சிக்கலானதாக இருந்தது. 

அடிக்கடி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இப்பெண்ணுக்கு அவசியமாக இருந்தது; இந்த உறுப்புமாற்று சிகிச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு கூட உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்ததால் இம்மருத்துவ செயல்முறை இன்னும் அதிக சிக்கலானதாக மாறியிருந்தது.  நுரையீரலியல், இதய மார்பறை அறுவைசிகிச்சை மற்றும் கதிர்வீச்சியல் உட்பட, பல்வேறு துறைகளைச் சேர்ந்த எமது அர்ப்பணிப்பு மிக்க நிபுணர்களின் சிறப்பான ஆதரவும், ஒத்துழைப்பும் இல்லாமல் இந்த சிறப்பான சாதனை சாத்தியப்பட்டிருக்காது. 

தஞ்சாவூரில் மூளைச் சாவடைந்த நோயாளியின் நுரையீரல்கள், தேவைப்படுகின்ற உடல்நல தரநிலைகளைப் பூர்த்தி செய்வதையும் மற்றும் இந்த இளம் பெண்ணுக்குப் பொருத்தமானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய எமது மருத்துவக் குழுவினர் மிக கவனத்துடன் செயல்பட்டனர்.  தஞ்சாவூரிலிருந்து சேகரிக்கப்பட்ட நுரையீரல்களை சென்னைக்கு உரிய நேரத்திற்குள் கொண்டு வரப்படுவதை ஏதுவாக்க பல்வேறு முகமைகளோடு நாங்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டோம்.

உறுப்புமாற்று சிகிச்சைக்குப் பிறகு இந்த சிறுமி இப்போது பாதிப்பிலிருந்து மீண்டு குணமடையும் பாதையில் பயணிப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  இச்சிறுமியின் உடல்நல சிக்கல்கள் மற்றும் தொடர் சிகிச்சை தேவைகளால் பத்தாவது வகுப்பை முடித்ததற்குப் பிறகு பள்ளிப் படிப்பை இவள் நிறுத்த வேண்டியிருந்தது,” என்று கூறினார்.
 
டாக்டர். ஸ்ரீநாத் விஜயசேகரன் இச்சிகிச்சை தொடர்பாக கூறியதாவது: “8 ஆண்டுகள் என்ற சிறு வயதிலேயே இச்சிறுமிக்கு ஏற்பட்ட காசநோய், அவளது சுவாசக்குழாயில் பெரிய வடுக்களை உருவாக்கியது.  இதனால் அதற்கு அடுத்த 7 ஆண்டுகளில் அடிக்கடி தொற்று பாதிப்புகள் கடும் சிரமத்தை ஏற்படுத்தின. 17 வயது ஆனபோது, எந்த வேலையும் செய்யாமல், ஓய்விலிருக்கும்போது கூட சுவாச சிரமம் ஏற்பட்டது. 

இதனால், 2022 – ம் ஆண்டில் எமது மருத்துவமனையில் அவள் அனுமதிக்கப்பட்டாள்.  கடந்த 2 ஆண்டுகளில், ஒரு நாளில் 2 லிட்டலிருந்து, 15 லிட்டர் வரை 24x7 அடிப்படையில் ஆக்சிஜன் ஆதரவு இச்சிறுமிக்கு தேவைப்பட்டது. ஆக்சிஜன் வழங்கப்பட்ட போதிலும் கூட, குறைந்தபட்ச தேவைப்பாடான 95% பதிலாக, 85% - க்கும் குறைவாகவே ஆக்சிஜன் நிறைசெறிவு நிலை இருந்தது.  நுரையீரல் மாற்று சிகிச்சை என்பது மட்டுமே ஒரே சிகிச்சை விருப்பத்தேர்வாக இருந்தது. 

ஆனால், இவளுக்குப் பொருத்தமான உறுப்புகள் கிடைக்கப்பெறாத நிலை மற்றும் அவைகள் கிடைக்கப்பெறும்போது உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்படும் திறனின்றி, அதிக நோய்வாய்ப்பட்டு இச்சிறுமி இருந்தது என்ற காரணங்களினால் இரண்டு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அதிர்ஷ்டவசமாக, இச்சிறுமிக்கு இணக்கமான நுரையீரலை இறுதியில் நாங்கள் கண்டறிந்ததால் இந்த உறுப்புமாற்று சிகிச்சையை நாங்கள் வெற்றிகரமாக செய்ய முடிந்தது.”
 
டாக்டர். ஐஸ்வர்யா ராஜ்குமார் பேசுகையில், “ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளாக இந்நோயாளி படுக்கையிலேயே காலத்தை கழிக்க வேண்டியிருந்தது.  இவளது அறுவைசிகிச்சைக்கு முந்தைய 6 மாதங்களில் உணவு உண்ணும் செயல்பாடு கூட சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால், சாப்பிடுவது கூட பெரும் பிரச்சனையாக இச்சிறுமிக்கு இருந்தது. இருப்பினும், அவளது உடல்நிலையை அறுவைசிகிச்சைக்கு ஏற்றதாக தயார் செய்வதற்கு எமது குழுவினர் மிகப்பெரிய முயற்சிகளை மேற்கொண்டனர் மற்றும் இறுதியாக இந்த உறுப்புமாற்று சிகிச்சையை வெற்றிகரமாக நிகழ்த்தியிருக்கின்றனர்.

அறுவைசிகிச்சைக்குப் பிறகு, தீவிர சிகிச்சைப் பிரிவில் ஒரு வார காலமும் மற்றும் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதற்கு முன்பு பொது வார்டில் கூடுதலாக 2 வாரங்களும் இச்சிறுமி தங்கியிருந்தார்.  இப்போது இந்த இளம் பெண்ணால், தானாகவே நடக்கவும், சாப்பிடவும் மற்றும் தினசரி வாழ்க்கை செயல்பாடுகளில் ஈடுபடவும் முடிவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.  அவளது கல்வியை மீண்டும் தொடங்கி, இயல்பான வாழ்க்கையை இந்த இளம் பெண் நடத்த முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இதில் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெறும் சாத்தியமும் உள்ளடங்கும் என்று கூறினார்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்