கஜா புயலை போல நிவார் புயல் இல்லை.. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்!

திங்கள், 23 நவம்பர் 2020 (14:43 IST)
கஜா புயலை போல் நிவார் புயல் தாக்கும் நிலை தற்போது இல்லை என்றும், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். 
 
சென்னை எழிலகம் வளாகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீராதாரமாக இருக்கக்கூடிய வடகிழக்கு பருவமழையானது துவங்கிய காலம் முதல் முதல்வர் மற்றும் இந்திய ஆட்சி பணியாளர்கள் அறிவுரையின்படி தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதிகாலை 2.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியுள்ளது என்றும் கூறினார்.
 
மேலும், 6 தேசிய பேரிடர் மீட்பு படை அரக்கோரணத்தில் இருந்து கடலூர் மாவட்டத்திற்கும், 2 தேசிய பேரிடர் மீட்பு படை சென்னையில் உள்ளதாக தெரிவித்த அவர், நிவார் புயலினால் ஏற்படும் கன மழை, அதீத மழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும், மீன்வர்கள் பாதுகாப்பாக இருக்கவும் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
தொடர்ந்து பேசிய அவர், அனைத்து ஏரிகள், நீர் நிலைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காய்வாய்களில் அடைப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், பாதிக்கப்பட்ட பகுதியில் இருக்கும் மக்களை பாதுக்காப்பான இடத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
 
நிவாரண முகாம்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், மின் கம்பிகள் துண்டிப்பு உள்ளிட்டவை தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், இடி, மின்னல் சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், நீர் நிலைகள், நீர் தேங்கும் இடங்கள், கடற்கரை பகுதிகளில் குழந்தைகளை அனுமதிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
 
உள்ளாட்சி அமைப்புகள் நீர் தேங்குவதை வெளியேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என கூறிய அவர், தேவையான உணவுகளை பொதுமக்கள் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் டவர் சரியாக உள்ளதா என்பதை கண்காணிக்க  வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
 
கஜா புயலை போல் நிவார் புயல் தாக்கும் நிலை தற்போது இல்லை என கூறிய அவர், சமூக வலைதளங்களில் வெளியாகும் செய்தையை நம்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்