விதவை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் அதிரடி கைது: அதிர்ச்சி காரணம்

செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (09:25 IST)
விதவை பெண்ணை திருமணம் செய்த வாலிபர் அதிரடி கைது
விதவைப் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி அவரிடம் இருந்த 20 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளதால் சென்னையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னையை அடுத்த திருநின்றவூர் என்ற பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் பம்மல் என்ற பகுதியைச் சேர்ந்த விதவையான ஜெயஸ்ரீ என்பவருடன் பழகி வந்தார். ஜெயஸ்ரீக்கு இரண்டு குழந்தைகள் இருந்த போதிலும் அவரை திருமணம் செய்து கொள்ள ரமேஷ் முன் வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் தான் ஒரு அரசு அதிகாரி என்றும் தன்னால் ஜெயஸ்ரீ மற்றும் அவருடைய குழந்தைகளை நல்லபடியாக வைத்துக் காப்பாற்ற முடியும் என்றும் நம்பிக்கையான வார்த்தைகள் ரமேஷ் கொடுத்ததில் ஜெயஸ்ரீ மயங்கியுள்ளார்.
 
இதனை அடுத்து ஜெயஸ்ரீ-ரமேஷ் திருமணம் சமீபத்தில் நடந்தது. இந்த நிலையில் திருமணத்திற்கு பின்னர்  ரமேஷ் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால் அவர் மீது ஜெயஸ்ரீக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதன் பின்னர் விசாரித்தபோது ரமேஷுக்கு எந்தவிதமான வேலையும் இல்லை என்றும் அரசு வேலை செய்வதாக பொய் கூறி ஜெயஸ்ரீயை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது
 
மேலும் ஜெயஸ்ரீயிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தை அடிக்கடி கேட்டு தொந்தரவு செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீரென ஜெயஸ்ரீயிடம் இருந்த 20 சவரன் தங்க நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை திருடிக்கொண்டு ரமேஷ் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது
 
இது குறித்து ஜெயஸ்ரீ போலீசில் கொடுத்த புகாரை அடுத்து அடுத்த சில மணி நேரங்களில் ரமேஷை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். முன் பின் தெரியாத ஒருவர் திடீரென அன்புடன் பேசியதை வைத்து ஜெயஸ்ரீ போன்ற பெண்கள் இனிமேலாவது சுதாரிப்பாக இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்