பயணிகளிடம் வழிப்பறி செய்த போலீசார் - சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2017 (11:26 IST)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம், ரெயில்வே போலீசார் 3 பேர் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஏராளமான பயணிகள் வந்து செல்வதால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எப்போதும் கூட்டம் நிரம்பி வழியும். எனவே, அங்கு திருட்டு, வழிப்பறி ஆகியவை நடக்காமல் இருப்பதற்காக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருப்பது வழக்கமான ஒன்றாகும். 
 
இந்நிலையில், பீகாரை சேர்ந்த பீரேந்திர ரெட்டி என்ற பயணி ஒருவர், ரயில் நிலையத்தில் பயணிகளின் அறையில் தனது ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த தமிழ்நாட்டு சிறப்புப் படை காவலர்களான இருதயராஜ், அருள்தாஸ், ராமலிங்கம் ஆகிய மூன்று பேரும் அங்கு வந்து, அவரை மிரட்டி அவரிடமிருந்த பணம் மற்றும் செல்போனை கேட்டுள்ளனர். அவர் மறுக்கவே, அவர்கள் மூவரும் அவரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை வழிப்பறி செய்துள்ளனர்.
 
இதையடுத்து, பீரேந்திர ரெட்டி ரயில்வே துறை ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலிடம் நேரடியாக புகார் அளித்தார். இதனையடுத்து, அவர்கள் மூவரையும் அவர் கைது செய்த உத்தரவிட்டார். தற்போது அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். 
 
காவல் அதிகாரிகளே பயணி ஒருவரிடம் வழிப்பறி செய்த சம்பவம், பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்