விஷால் திருமணம் செய்து கொள்ள மாட்டார் - ராதிகா கிண்டல்

வெள்ளி, 2 டிசம்பர் 2016 (17:07 IST)
நடிகர் விஷால் திருமணம் செய்து கொள்வார் என்பதில் தனக்கு நம்பிக்கையில்லை என நடிகை ராதிகா சரத்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார் மற்றும் செயலாளர் ராதாரவி ஆகியோருக்கும், தற்போதுள்ள விஷால் அணிக்கும் பனிப்போர் நடந்து வருவது எல்லோருக்கும் தெரியும்.
 
சரத்குமார் மற்றும் ராதாரவி மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன்பின் நடிகர் சங்க உறுப்பினர் பதவியிலிருந்து அவர்கள் இருவரும் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டனர். அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. இதற்கிடையில் அவர்கள் இருவரையும், நிரந்தரமாக நீக்கம் செய்து சமீபத்தில் நடிகர் சங்கம் அறிவிப்பை வெளியிட்டது.
 
அதேபோல், ஏற்கனவே நடிகையும் சரத்குமாரின் மகளுமான வரலட்சுமிக்கும், விஷாலுக்கும் இடையே காதல் இருந்த வந்ததாகவும், சரத்குமாருடன் விஷால் தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வந்ததால், அந்த காதல் முறிந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகின.
 
இதையடுத்து, நடிகையும், சரத்குமாரின் மனைவியுமான ராதிகா சரத்குமார், நடிகர் சங்க நிர்வாகிகளுக்கு எதிராக அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார்.
 
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராதிகா “ புதிய நடிகர் சங்க கட்டிடம் முடிக்கப்பட்டவுடன், அங்குதான் தன்னுடைய திருமணம் என நடிகர் விஷால் கூறினார். இன்னும் ஒரு வருடத்தில் கட்டிடம் கட்டப்படும் எனவும் அவர் கூறியிருந்தார். 
 
தற்போது அந்த கட்டிடம் கட்டி முடிக்க இன்னும் 3 வருடங்கள் ஆகும் என அவர் கூறுகிறார். ஒருவேளை கட்டிடம் கூட கட்டி முடிக்கப்படலாம். ஆனால் அவர் திருமணம் செய்து கொள்வார் என்பதை நம்ப முடியவில்லை” எனக் கிண்டலடித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்